Thursday, February 12, 2026

மரணத்தை வென்ற அதிசய குழந்தை.. உலகையே ஆக்கிரமித்த மழலையின் சிரிப்பு... துருக்கியில் நெகிழ்ச்சி சம்பவம்

துருக்கி நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் 128 மணிநேரம் சிக்கியிருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கியை மையமாகக் கொண்டு ரிக்டர் 7.8 என்ற அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகள் கோர பாதிப்பை சந்தித்தன. ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 40,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த மீட்பு பணியின் போது இடிபாடுகளில் பல நாள்கள் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட அதிசய செய்திகளும் ஆங்காங்கே வந்த வண்ணம் உள்ளனர். அப்படித்தான் துருக்கியின் அன்தாக்யா பகுதியில் ஒரு 2 மாத குழந்தை சுமார் 128 மணிநேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. கடும் குளிரில் இடிபாடுகளுடன் சிக்கிய இந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அதிசயமாக பார்க்கப்பட்டது. குழந்தையை இடிபாடுகளில் இருந்து மீட்டு கதகதப்பான கம்பளியில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அங்கு அந்த குழந்தையை சுத்தம் செய்து உணவு கொடுத்தனர். அதன் பின்னர் அந்த குழந்தை அழகாக சிரித்து விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் நெகிழ்ச்சியுடன் லைக்குகள் மற்றும் கமெண்டுகளை பதிவிட்டு குவித்து வருகின்றனர்.