நேற்று இருசக்கர வாகன விபத்தில் மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு.

செய்திகள்

தரங்கம்பாடியில் நேற்று இருசக்கர வாகன சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முகமது ஷகின், ஹரி, ஆகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மீது வாகனம் மோதியதில் 4 பேரும் கீழே விழுந்து உள்ளனர். அப்போது அவ்வழியே செங்கற்கள் ஏற்றி சென்ற டிராக்டர் எதிர்பாரத விதமாக கீழே விழுந்து கிடந்த மூன்று இளைஞர்கள் மீது ஏறியதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியாகினர். மேலும் ஸ்ரீதர் என்பவர் நாகப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று விபத்து நடந்த இடமான தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி பகுதி தேசிய நெடுஞ்சாலைக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சம்பவ இடத்தை  பார்வையிட்டார். மேலும் சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, மஞ்சுளா, தரங்கம்பாடி வட்டாட்சியர்  மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.