தரங்கம்பாடி அருகே பொறையாரில் மிகவும் பழமையான குமரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 108 ஆம் ஆண்டு வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக வைகாசி விசாகப் பெருவிழா திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு குமரப்பெருமான், வள்ளி ,தெய்வானை, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் பல்லக்கில் எழுந்தருள செய்து ஹோமம் வளர்க்கப்பட்டு கங்கனம் கட்டி கன்னிகாதானம் செய்யப்பட்டது.

பின்னர் பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது.பின்னர் பூரணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. திருக்கல்யாணத்திற்கு வந்த பக்தர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

