
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் செயல்திறன் குறித்து மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அதிகாரிகள் குழுவினர் கூட்டாய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, கோட்டாட்சியர் யுரேகா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார் விஸ்வநாதன் காவல்துறை தீயணைப்பு துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மயிலாடுதுறை, மாவட்டத்தை சார்ந்த 76 பள்ளிகளில் உள்ள 396 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்களில் தீயணைப்பான், முதலுதவி பெட்டி, வாகனத்தின் இருக்கைகள் மற்றும் தலம், வாகன சக்கரத்தின் தன்மை, ஆவணங்கள், பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு, வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, அவசரகால வழி, உள்ளிட்ட வாகனத்தின் தகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகனத்தில் உள்ள அவசரகால வழி கதவை உடைத்து திறந்து பார்த்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சோதனை மேற்கொண்டார். வாகனங்கள் இயக்கி பார்க்கப்பட்டது.

இதில் குறைகள் கண்டறியப்பட்ட 18 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது. குறைகளை சரி செய்து மறு தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச உடல் மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக விபத்து, மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக எளிய முறையில் பாதுகாத்துக் கொள்வது குறித்தான விழிப்புணர்வு வழிமுறைகளை மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

