மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரை புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம். அரசு பேருந்துதை 12 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வழிகளில் பயணிகளை பேருந்தில் ஏற்றி இறக்கி ஓட்டுனராக மாறிய எம்எல்ஏ:-

செய்திகள்

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரை புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம். அரசு பேருந்தை 12 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வழிகளில் பயணிகளை பேருந்தில் ஏற்றி இறக்கி ஓட்டுனராக மாறிய எம்எல்ஏ:-

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேருந்து நிலையத்திலிருந்து பட்டவர்த்தி மற்றும் மயிலாடுதுறை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய வழித்தடத்தில் புதிய அரசு பேருந்து சேவை இன்று துவக்கப்பட்டது. மணல்மேடு மற்றும் பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறைக்கு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என அனைவரும் உரிய நேரத்தில் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிய படியும் ஆபத்தான நிலையில் பயணம் செய்தும் பணிக்கு சென்றனர். இந்நிலையில் இப்பகுதிக்கு புதிய பேருந்து வசதி வேண்டுமென்று பொதுமக்கள் என பலரும் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் இன்று மணல்மேட்டில் இருந்து பட்டவர்த்தி வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்தார். மணல்மேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் புதிய பேருந்தை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் தானே பேருந்தை ஓட்டிச் சென்றார். மணல்மேடு, திருவாளபுத்தூர், பட்டவர்த்தி, மல்லிகை கொல்லை, வில்லியநல்லூர், நீடூர் வழியாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை வந்த புதிய பேருந்தை கிராம மக்கள் வழிநெடிகளும் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்கியும் விட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் வரை புதிய பேருந்தை ஓட்டிச்சென்றார்.

வழக்கமாக புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைக்கும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு பேருந்தை இயக்க தெரியும் பட்சத்தில் சில அடி தூரம் வரை பேருந்தை இயக்குவது வழக்கம். அதேபோன்றுதான் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பேருந்தை ஓட்ட துவங்கியதும் பலரும் இவர் சில அடிகள் வரை ஓட்டி செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக, 12கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து ஓட்டுநராக மாறி பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பொதுமக்களை பேருந்தில் ஏற்றி இறக்கிய நிகழ்வு பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இப்பேருந்தானது மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கு செல்லவும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்பவர்களுக்காகவும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *